அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகளை சமூக ஊடகங்களில் 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்களாக வெளியிட்டால் உரிமைக்குழு மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் புகார் மற்றும் விவாதம்:
விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சட்டசபையை மிகச்சிறப்பாக வழிநடத்திச் செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். ஆனால், எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதில் சொல்லும் போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால், நீங்கள் எங்களின் கேள்விகளையும் கருத்துகளையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். கேள்விகள் கேட்டால் அதற்குப் பதில் சொல்லலாம். ஆனால், இப்போது சட்டமன்றத்தில் பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டார்கள். நமக்கு நாமே சில நேரங்களில் 'நாம் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?' என்ற சந்தேகம் எழுகிறது" எனக் விமர்சித்தார்.
மேலும், "அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினாலும், அது நேரலையில் சென்றுவிடுவதால், யூ-டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' (Reels) ஆகக் கட் செய்யப்பட்டு அதிகமாகப் பகிரப்படுகிறது. இதனால் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதில் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது" என்று சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களின் பதில்:
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த கால ஆட்சியில் 25 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தபோது ஏன் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், "இப்போது மக்கள் சீரியல் பார்ப்பதில்லை; சட்டசபை நேரலையில் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள் எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்" என்றார்.
சபாநாயகரின் அதிரடி எச்சரிக்கை:
இவ்விவகாரம் குறித்து இறுதி முடிவு அறிவித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை ஒரு ஊடகம் வெளியிட்டது குறித்து திமுக சார்பில் உரிமைக்குழுவுக்கு அனுப்பக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை எடுத்து எந்த வகையில் பயன்படுத்தினாலும் அல்லது சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டாலும் அது அவையின் விதிகளை மீறும் செயலாகும். அவ்வாறு விதிகளை மீறிச் செயல்படும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள் குறித்துத் தன் கவனத்திற்குக் கொண்டு வந்தால், அவற்றைச் சட்டசபை உரிமைக்குழுவின் (Privilege Committee) விசாரணைக்கு அனுப்பி நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.