பேச்சுவார்த்தையில் உடன்பாடு... தவெக - காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி!
2029 நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் குறித்த அமைச்சர் ராஜேஷ் குமாரின் பேச்சால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர். கூட்டணியின் ஒற்றுமையைக் காக்க சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்க்குமாறு டெல்லி மேலிடம் அறிவுறுத்தியதை அடுத்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என முதல்வர் விஜய் தெரிவித்து இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், "எங்கள் தலைவர் ராகுல் காந்தி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக வருவார். ஒருவேளை தவெக அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம். எங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பெரிது" என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த அதிரடிப் பேச்சு தவெக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சமரசப் புள்ளி:
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிங்கம், யானை, நரி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு குட்டிக்கதையைப் பகிர்ந்து இந்த சலசலப்பை முடிவுக்குக் கொண்டு வர முயன்றார்.
முதல்வர் - காங்கிரஸ் எம்பிக்கள் சந்திப்பு:
நாடாளுமன்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். இக்கூட்டத்தின் போது, எம்பிக்களாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யைத் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
டெல்லி மேலிட உத்தரவு:
இந்தச் சந்திப்பின் போது, கூட்டணியின் ஒற்றுமைக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பது தெரிவிக்கப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என காங்கிரஸ் டெல்லி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக எம்பிக்கள் முதல்வரிடம் விளக்கினர்.
இதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், "கூட்டணி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்" எனக் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.