6 ஆண்டுகளாக காதலித்து வந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய ஏ.சி. மெக்கானிக் – பண்ருட்டியில் அதிர்ச்சி சம்பவம்
பண்ருட்டியில் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இளம்பெண்ணிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, ஏ.சி. மெக்கானிக் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இளம்பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நர்சிங் டிப்ளமோ முடித்துவிட்டு பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் பி.இ. பட்டதாரி என்றும், சென்னையில் தங்கி ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருந்தகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்
சம்பவத்தன்று இளம்பெண் பணியில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞர், அவரிடம் பேச முயன்றுள்ளார். இளம்பெண் வேறு ஒரு இளைஞருடன் பேசுவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் தான் கொண்டு வந்த கத்தியால் இளம்பெண்ணின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது கத்தியுடன் இருந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.