“நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு” – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய குடும்பத்தினர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
மாணவனை இழந்த குடும்பத்தினர் நீதி கேட்டு போராடிய நிலையில், அவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் உயிரிழந்து 12 நாட்கள் ஆகியும் வழக்கின் உண்மை நிலை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவர் கொலை செய்யப்பட்டாரா, அவரது மரணத்துக்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், குற்றம் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவரின் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.