தமிழகத்தில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில் கள் இறக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். கள் இறக்க அனுமதிப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும், கிராமப்புற பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றும் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரசாயனக் கலப்புள்ள மதுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடி வருவதாகவும், தவெக அரசு இந்த பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 'கள்':
"மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை நமக்குத் தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பாக மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளம்ப்படுத்தவும், சிதைந்து வரும் கிராமப்புற பொருளாதாரத்தில் ஒரு புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை."
பாஜகவின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
"இரசாயனக் கலப்புள்ள மற்றும் மனித உயிர்களைக் குடிக்கும் நச்சு மது அரக்கனுக்கு எதிராகத் தமிழக பாஜக பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. 'மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பாரம்பரிய பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்' என்ற முழக்கத்தை பாஜக எப்போதும் ஓங்கி ஒலித்து வந்துள்ளதுடன், கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதாடியும் வந்துள்ளேன். இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகால போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது."
முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை:
"எனவே, கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் இனி எப்போதும் தமிழகத்தை விட்டு விலகவும், வறுமையில் வாடும் விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்கவும் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆணையத்தின் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், அதனைச் சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.