மகள், மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா..!
சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
நடிகை ஜோதிகா - நடிகர் சூர்யா தம்பதி தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் சூர்யா - ஜோதிகா, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன்முறையாக ஜோடியாக இணைந்து நடித்தனர். அதன்பிறகு ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘மாயாவி’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அப்படம் வெளியான சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர்.
20 ஆண்டுகள் நிறைவு
சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையில் இவர்களது திருமணம் நீண்ட காலம் நிலைக்காது என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், 20 ஆண்டுகளை நிறைவு செய்து தங்களது திருமண வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடிய சூர்யா - ஜோதிகா, இந்த முக்கியமான நாளை குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
மீண்டும் திருமணம்
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடிய இருவரும், மகள் தியா மற்றும் மகன் தேவ் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவை ‘தி சீக்வல்’ (THE SEQUEL) என்று குறிப்பிட்டு ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவுக்கு உறுதியளிக்கிறேன்...
திருமண நிகழ்வில் ஜோதிகா சூர்யாவிடம் தனது அன்பையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் மகிழ்ச்சியாக இருப்பேன், வாழ்க்கையைக் கொண்டாடுவேன், குறைகளைக் சொல்லாமல் இருப்பேன், நன்றியுடன் இருப்பேன், ஆரோக்கியமாக இருப்பேன், சிறந்த தாயாக இருப்பேன்” என ஜோதிகா உறுதியளித்துள்ளார்.
மேலும், எப்போதும் அந்த குறைகள் நிறைந்த மனைவியாகவே இருப்பேன் என்றும், சண்டை போடுவேன், பிறகு சமாதானமாகிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எல்லாவற்றையும் விட, நம் நட்பை நான் பொக்கிஷமாகப் போற்றுவேன். நாம் அடுத்த இருபது ஆண்டுகளுக்காக குறைகளோடு இருக்கும் நாம், முழுமையான புரிதலோடு இருப்போம்” என்றும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.