ரக்பி பிரீமியர் லீக்: கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன - ஸ்ருதிஹாசன் பெருமிதம்!
ஐதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பு குறித்தும், பெண்களுக்கான சம வாய்ப்பு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான 'சஞ்சாரி' (Sanchari) பாடலை அவர் மிகச் சிறப்பாகப் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்வில் பேசிய ஸ்ருதிஹாசன், ''இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது. ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும், அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும்; அது இயல்பான ஒன்றுதான்.
ஆனால், ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது, கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாகவும் அமைகின்றன. ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்'' என்றார்.
ராகுல் போஸை (Rahul Bose) தனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், ''அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது, குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது, இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதை உணர்ந்தேன்.
விளையாட்டு வரலாற்றில், குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி, அங்கீகாரம், முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு ஆகியவை மட்டும்தான். திறமையான வீரர்களுக்குத் தங்கள் கனவுகளை நனவாக்கவும், இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது'' என்று பாராட்டு தெரிவித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.