கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக திமுக மனு... அவசர வழக்காக இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை, உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையின் மத்தியில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய பேச்சு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் விசாரணையை பாதிக்கும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டிய திமுக, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக ஜூலை 7-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "கரூரில் எங்களுக்கு ஒரு முக்கியமான கணக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விடப்போவதில்லை. எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்கள். எங்கள் மக்கள் மீது கை வைத்தீர்கள். கரூரில் என்ன நடந்தது என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான்" என்று பேசிய அவர், கரூரில் கூட்ட நெரிசல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், திமுக தலைமையையும் கடுமையாக விமர்சித்து அரசியல் ரீதியாக பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.
இந்தப் பேச்சு தொடர்பாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், அமைச்சர் வெளியிட்ட கருத்துகள் விசாரணையை பாதிக்கும் வகையில் இருப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அஹ்மதி, "இந்த நீதிமன்றம் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் முக்கிய சாட்சிகளை பாதிக்க முயற்சிக்கின்றனர்" என்று வாதிட்டார். இதையடுத்து, இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.
மனுவில் மேலும், முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உள்ளதாக வெளியான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த சந்திப்புகள் சிபிஐ விசாரணையில் முக்கிய சாட்சிகளாக இருக்கும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க உரிய உத்தரவு வழங்க வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
தற்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையின் போது அரசியல் தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையின் முடிவு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.