"நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி" - தமிழக மக்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் நெஞ்சார்ந்த நன்றி!
சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவு அளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வாக்களித்த தமிழக மக்களுக்கும் முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று மக்கள் அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் மக்கள் நம்பிக்கையின் மூலம் அமைக்கப்பட்ட அரசுக்குத் தேவையான ஆதரவு கிடைத்து, நம்பிக்கைத் தீர்மானம் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதே வேளையில், என்றும் துணையாக நிற்கும் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் அன்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
"தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை" என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த வெற்றியைத் தமிழக மக்களுக்குச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி அமைந்துள்ள இந்த மக்கள் அரசின் மீதான நம்பிக்கையைத் தக்கவைத்துச் செயல்படப்போவதாகவும் அவர் தனது பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.